in

பழனி அருள்மிகு மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா திருக்கல்யாணம்

பழனி அருள்மிகு மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா திருக்கல்யாணம்

 

பழனி அருள்மிகு மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசித்தேரோட்டம் இன்று (புதன்கிழமை) மாலை தேரடியில் நடைபெறுகிறது.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயிலான அருள்மிகு மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா கடந்த மாதம் பிப்.21 ம் தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கியது. பிப்.25ம் தேதி முக்கிய நிகழ்ச்சியான திருக்கம்பம் சாட்டுதல் நடைபெற்றது.

தொடர்ந்து மார்ச்.4ம் தேதி தங்கக்கொடி மரத்தில் திருக்கொடியேற்றம் மற்றும் திருக்கம்பத்தில் பூவோடு வைத்தல் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கம்பத்துக்கு பால், தண்ணீர், மஞ்சள்நீர் ஊற்றியும், மலர் மாலைகள் அணிவித்தும், எலுமிச்சை மாலை போட்டும் வழிபாடு நடத்தினர். பழனி மட்டுமன்றி அண்டை மாநிலமான கேரளத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பூவோடு, தீச்சட்டி ஏந்தியும், மாறுவேடங்கள் பூண்டு வந்து அம்மனுக்கு நேர்ச்சை செலுத்தினர்.

விழா நாட்களில் அம்மன் சிம்மவாகனம், தங்கக்குதிரை, வெள்ளியானை, தங்கமயில் போன்ற வாகனங்களில் நான்கு இரதவீதி உலா எழுந்தருளினார், செவ்வாய்க்கிழமை இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. பத்மசாலா பிரிவினர் அம்மனுக்கு பொட்டு, காரை கொண்டு வந்த பிறகு திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக அருள்மிகு மாரியம்மனுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட 16வகை பொருட்களால் சோடஷ அபிஷேகமும், சோடஷ உபச்சாரமும் நடத்தப்பட்டது.

தொடர்ந்து பின்னர் பட்டாடைகள், நகைகள் அணிவிக்கப்பட்டு அம்மனுக்கும், திருக்கம்பத்துக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. வேத விற்பன்னர்கள் மந்திரம் ஓத, ஓதுவாமூர்த்திகள் திருமறை பாடல்கள் பாட மேளதாளம் முழங்க நடைபெற்ற திருக்கல்யாணத்தை ஏராளமான பக்தர்கள் பார்த்து ஓம்சக்தி, பராசக்தி என கோஷமிட்டனர்.

 

இன்று (புதன்கிழமை) மாசித்தேர் வடம்பிடித்தலும், வண்டிக்கால் பார்த்தல், வானவேடிக்கை ஆகியன நடைபெறுகிறது. நள்ளிரவு சக்திகரகம் வந்தவுடன் வியாழக்கிழமை அதிகாலை திருக்கம்பம் கங்கையில் சேர்க்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.

நிகழ்ச்சியில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லட்சுமி, கண்காணிப்பாளர் அழகர்சாமி, மணியம் சேகர், காணியாளர்கள் நரேந்திரன், கந்தசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

What do you think?

திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி ஆலய மாசிமக பெருவிழா தேரோட்டம்

பழனி அருள்மிகு மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு பூச்சொறிதல் ரத ஊர்வலம்