in

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 47ஆவது பிறந்தநாள் – மதுரை ரயில் நிலையத்தில் ஆர்வலர்கள் கொண்டாட்டம்

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 47ஆவது பிறந்தநாள் – மதுரை ரயில் நிலையத்தில் ஆர்வலர்கள் கொண்டாட்டம்

 

மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த ரயில் போக்குவரத்தாகத் திகழும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (ஆக.15) தனது 47ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறது. ரயில் ஆர்வலர்கள் மதுரை ரயில் நிலையத்தின் 4ஆவது நடைமேடையில் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜின் முன்பாக கேக் வெட்டி கொண்டாடினர்.

மதுரையிலிருந்து சென்னைக்கு பகல் நேர அதிவிரைவு ரயிலான வைகை எக்ஸ்பிரஸ் கடந்த 1977-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. பகல் நேரத்தில் சென்னைக்குச் செல்கின்ற வாய்ப்பின் காரணமாக தென் மாவட்ட வணிகர்களும், பொதுமக்களும் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.

மேலும் இந்த ரயிலின் பயணக் கட்டணம் பிற ரயில்களோடு ஒப்பிடுகையில் மிக மிகக் குறைவாகும். மதுரையிலிருந்து காலை 6.40 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.20 மணிக்கு 7.20 மணி நேரத்தில் சென்னை சென்றடையும். அதேபோன்று சென்னையிலிருந்து (12635) பிற்பகல் 1.50 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு 7.25 மணி நேரத்தில் மதுரை சென்றடையும். இரு மார்க்கமும் பகல் நேர ரயில் என்பதால், தென்மாவட்டங்களைச் சேர்ந்த வணிகர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் வைகை எக்ஸ்பிரஸ் பெரிதும் உபயோகமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு 7.50 மணி நேரமாக இருந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் படிப்படியாகக் கடந்த பத்தாண்டுகளில் 35 நிமிட நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் தொடக்கத்தில் நிர்ணயிக்கப்பட்ட பயண நேரத்திலேயே பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் சென்னை-மதுரை மின்மயமாக்கம் காரணமாக 10 நிமிடங்கள் பயண நேரம் குறைக்கப்பட்டன. 2018-ஆம் ஆண்டு மதுரை-சென்னை மார்க்கத்தில் 5 நிமிடங்கள் குறைக்கப்பட்டன. 2019-ஆம் ஆண்டு மேலும் 5 நிமிடங்கள் குறைக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டு முதன் முதலாக வைகை எக்ஸ்பிரஸ்சில் தரமான அதே நேரம் எடை குறைந்த எல்.ஹெச்.பி. பெட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதன் காரணமாக 2022-ஆம் ஆண்டு மேலும் பயண நேரத்தில் 10 நிமிடங்கள் குறைக்கப்பட்டன.

இந்நிலையில், கடந்த ஆண்டு மதுரையிலிருந்து புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரத்தில் மேலும் 5 நிமிடங்களைக் குறைத்து, காலை 7.10 மணிக்குப் புறப்பட்டு சென்னைக்கு பிற்பகல் 2.30 மணிக்குப் பதில் 5 நிமிடம் முன்னதாக 2.25 மணிக்கு சென்றடைந்தது. இது தற்போது இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் பல்வேறு சதாப்தி ரயில்களுக்கு இணையான வேகமாகும். மைசூர்-சென்னை ரயில் (12008) 7 மணி 15 நிமிடங்களில் 500 கிலோ மீட்டர்களை வெறும் 2 நிறுத்தத்தில் கடக்கிறது. ஆனால் வைகை எக்ஸ்பிரஸ் அதே 7.15 மணி நேரங்களில் 497 கி.மீட்டர்களை 11 நிறுத்தங்களோடு கடக்கிறது.

இதுகுறித்து ரயில் ஆர்வலர் அருண் பாண்டியன் கூறுகையில், தெற்கு ரயில்வேயின் செயல்திறன் மேம்பாட்டிற்கான சான்று வைகை அதிவிரைவு ரயில் ஆகும். வைகை எக்ஸ்பிரசின் அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட அதிகரிக்காமல், இந்த சாதனை தொடர்ந்து நிகழ்த்தப்படுகிறது. மேலும் ரயிலில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து விதமான தொழில்நுட்ப அறிமுகங்கள் அனைத்தும் இந்தியாவில் வைகை எக்ஸ்பிரஸில் தான் முதன் முதலாக மேற்கொள்ளப்படும். இதற்குக் காரணம் திறமையாகக் கையாளும் தெற்கு ரயில்வே அனைத்து மட்ட ஊழியர்களின் ஒருங்கிணைந்த செயல்பாடு என்றால் அது மிகையல்ல. இது போன்ற சாதனைகளின் விளைவாக அடுத்த சில ஆண்டுகளுக்குள் வைகை எக்ஸ்பிரஸ் வெறும் 7 மணி நேரத்திற்குள் மதுரை-சென்னை-மதுரை பயண நேரம் சாத்தியப்பட்டாலும் வியப்பதற்கில்லை. அதற்கான பணிகளும் தற்போது ரயில்வே மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்’ என்றார்.

தொடர்ந்து வைகை எக்ஸ்பிரஸ் 47-ஆவது பிறந்தநாள் விழா மதுரை ரயில் நிலைய சந்திப்பின் 4ஆவது நடைமேடையில் இன்று அதிகாலை 6 மணி அளவில் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜின் முன்பாக ரயில் ஆர்வலர்கள் ஒன்றிணைந்து கேக் வெட்டி கொண்டாடினர். மேலும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பணிபுரிந்த மற்றும் பணி புரிகின்ற தொழில்நுட்ப பணியாளர்களை ரயில்வே ஊழியர்களை பாராட்டி நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.

What do you think?

விவாகரத்து பற்றி பேசிய அபிஷேக் பச்சன்

கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற “மண் உரிமை மற்றும் விதை பந்துகள் தயாரிப்பு