துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுப்பயணம்
தேசமும் தேச மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று பழனி முருகனிடம் வழிபட்டதாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்தார்.
ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி இன்று மதுரை திருப்பரங்குன்றத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு பழனி முருகன் கோவிலுக்கு வருகை தந்தார்.
ரோப் கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற துணை முதலமைச்சர் பவன் கல்யாணிற்கு திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து பவன்கல்யாண் அவரது மகன் அகிரா நந்தன் ஆகியோர் உச்சிகால பூஜையில் அமர்ந்து சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து பவன் கல்யாணிற்கு கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆந்திர துணை முதலமைச்சர் பவன்கல்யாண் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
தமிழ்நாட்டில் தான் மேற்கொண்டுள்ள ஆன்மிக பயணம் மிகவும் மனமகிழ்ச்சியை கொடுத்துள்ளது. தேசமும், தேச மக்களும் நன்றாக இருக்க வேண்டுமெனதான் எப்போதுமே கடவுளிடம் வேண்டுவேன். தற்போதும் மிகவும் புனிதமான பழனி ஸ்தலத்திற்கு வந்து பழனி முருகனிடமும் தேசமும், தேச மக்களும் சுபிட்சமாக வாழ வேண்டுமென வேண்டியுள்ளேன்.
பழனியில் இருந்து திருப்பதி கோவிலுக்கு தினமும் பேருந்து இயக்கப்பட்டதும், கொரோனா காலத்தில் அந்த பேருந்து சேவை நிறுத்தப்பட்டதும் தற்போதுதான் தனக்கு தெரியவந்தது என்றும், எனவே ஆந்திர போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் பேசி மீண்டும் பழனி திருப்பதி பேருந்து சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கிறேன் என்றும், பழனியில் இருந்து திருப்பதிக்கு தினசரி ரயில் சேவை வேண்டுமென்ற கோரிக்கையை மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆன்மிக ஸ்தலத்தில் அரசியல் குறித்து பேச வேண்டாம் என்றும், பழனியில் திருப்பதி தரிசனம் தொடர்பான சேவைகளுக்கான டிக்கெட்டுகளை புக் செய்யும் விதமாக பழனியிலேயே தகவல் மையம் திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பவன் கல்யாண் தெரிவித்தார்.
அப்போது ஆந்திர அதிகாரிகள் மற்றும் பழனி கோவில் இணைஆணையர் மாரிமுத்து ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் ரோப் கார் மூலம் கீழே இறங்கி மதுரைக்குச் சென்றார்.