in

என்ன பெரிய்ய ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மெண்ட் ஸ்கூல் ஆஃப் புரோட்டா தெரியுமா?


Watch – YouTube Click

என்ன பெரிய்ய ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மெண்ட்… ஸ்கூல் ஆஃப் புரோட்டா தெரியுமா..?

ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மெண்ட், ஸ்வல் ஆஃப் லா என பல்வேறு படிப்புகள் தொழில்முறையில் வந்துவிட்டன. ஆனால், புரோட்டா தயாரிப்பதற்கென்று தனியாக புரோட்டா ஸ்கூல் மதுரையில் உருவாகி, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புரோட்டா மாஸ்டர்கள் இங்கு படித்துச் சென்று உலகம் முழுவதும் சம்பாதித்து வருகின்றனர். அது குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு.

இட்லிக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டு மக்கள் விரும்பிச் சாப்பிடும் உணவென்றால் அது புரோட்டாதான். இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தின் தேசிய உணவாகவே புரோட்டா மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக மதுரை புரோட்டாவுக்கு உலகெங்கும் வாழும் தமிழர்களிடத்தில் தனிச் சிறப்பு மிக்க இடமுண்டு. பன் புரோட்டா, முட்டைப் புரோட்டா, மட்டன் புரோட்டா, சிக்கன் புரோட்டா என கலந்துகட்டி அடிக்கும் புரோட்டா ரசிகர்கள் மதுரையின் புரோட்டாக்கடைகளை ஒரு கை பார்க்கத் தவறுவதில்லை.

இந்நிலையில்தான் மதுரையில் ‘புரோட்டா ஸ்கூல்’ என்ற பெயரில் புரோட்டா பயிற்சிக்கூடம் ஒன்று துவங்கப்பட்டு, இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புரோட்டா மாஸ்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் பல்வேறு நாடுகளில் சராசரியாக மாதமொன்றுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை சம்பளம் பெறுகின்றனர். மதுரை தபால்தந்தி நகர் அருகேயுள்ள கலை நகர் 2-ஆவது தெருவில் இயங்கி வரும் ‘புரோட்டா பள்ளிக்கூடத்ததிற்கு’ ஈடிவி பாரத் சார்பாக ஒரு விசிட் அடித்தோம்.

மிக சுறுசுறுப்பாக அந்தப் பள்ளிக்கூடத்தின் வகுப்பறைக்குள் 20க்கும் மேற்பட்ட ‘மாணவர்கள்’ புரோட்டாவுக்கு மாவு பிசைந்தும், அடித்தும், தட்டியும், வீசியும் சும்மா தூள் பரப்பிக் கொண்டிருந்தார்கள். இவர்களில் ஒரு பெண் புரோட்டா மாஸ்டரும் கற்றுக் கொண்டிருந்தார். மதுரை ஊமச்சிகுளத்தைச் சேர்ந்த அந்தப் பெண் நிர்மலா கூறுகையில், புரோட்டா மாஸ்டருக்கான படிப்புக் குறித்து அறிந்து இங்கு வந்து சேர்ந்தேன். இன்றைக்கு புரோட்டா மாஸ்டர் என்றாலே ஆண்கள் மட்டும்தான் உள்ளனர். ஒரு பெண்ணாக நாமும் இந்தத் தொழில் செய்வோமே என்ற ஆர்வத்தின் பேரில் இங்கு பயிற்சி பெற்று வருகிறேன். இங்குள்ள ஆசிரியர்கள் மிகச் சிறப்பாக கற்றுத் தருகின்றனர். பெண்களும் இதைக் கற்றுக் கொள்ள முடியும் என்பதை இங்கு வந்துதான் தெரிந்து கொண்டேன். புரோட்டா செய்யத் தெரிந்து கொள்ளலாம் என்று வந்த எனக்கு, தற்போது இதையே தொழிலாகச் செய்ய வேண்டும் என்ற அளவுக்கு ஆர்வம் பிறந்துள்ளது’ என்றார்.

சென்னை ஆவடியில் ஹோட்டல் நடத்தி வரும் குருசங்கர் கூறுகையில், ‘என்னுடைய ஹோட்டலில் வேலை செய்யும் புரோட்டா மாஸ்டர்கள் வருவார்கள். சென்றுவிடுவார்கள். தொடர் பணியின் பொருட்டு அவர்கள் கிடைப்பது மிகக் கடினமாக இருந்தது. ஆதலால் இதனை நாமே கற்றுக் கொண்டால் என்ன என்ற அடிப்படையில், அதுகுறித்த பயிற்சி நிலையங்களைத் தேடிப் பார்த்தேன். சென்னையில் எங்கும் இல்லை. ஆகையால் மதுரையிலுள்ள செல்ஃபி புரோட்டா ஸ்கூலுக்கு பயிற்சிக்காக வந்தேன். இன்றுடன் எட்டு நாள் ஆகிறது’ என்றார்.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த விவசாயி ராஜ்குமார் கூறுகையில், ‘கத்திரி, வெண்டை உள்ளிட்ட காய்கறிகளைப் பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறேன். புரோட்டா மாஸ்டராக வேண்டும் என்ற ஆவலுடன்தான் இங்கு பயிற்சி எடுக்க வந்துள்ளேன். இன்றுடன் பத்து நாட்கள் முடிவடைந்துவிட்டன. எனது பயிற்சியை முடித்து சான்றிதழும் பெற்றுக் கொண்டேன். படிப்பு மட்டும் இந்தக் காலத்தில் போதாது. கூடவே கைத்தொழிலும் அவசியம். அப்போதுதான் பிறர் முன் வாழ்ந்து காட்டுவதோடு ஜெயித்தும் காட்ட முடியும். நாடு முன்னேற முன்னேற உணவுத்துறையும் பெருமளவில் வளர்ச்சி பெறும். அதன் காரணமாகவே நான் இந்தத் தொழிலைக் கற்றுள்ளேன்’ என்றார்.

செல்ஃபி புரோட்டா ஸ்கூலின் நிறுவனரும், புரோட்டா மாஸ்டருமான முகமது காசிம் கூறுகையில், ‘மதுரையில் செல்ஃபி புரோட்டா கோச்சிங் சென்டர் என்ற பெயரில் புரோட்டா மாஸ்டர்களுக்கான பிரத்தியேக பயிற்சி மையத்தை கடந்த ஆறு ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். இதுவரை மூவாயிரம் நபர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளோம். இந்த பத்து நாள் பயிற்சியில் புரோட்ட வெரைட்டிஸ், சால்னா, கிரேவி, சப்பாத்தி, தோசை என கல்லில் சுடும் அனைத்து அயிட்டங்களிலும் தேவையான பயிற்சி வழங்கப்படும். இதுபோக சிக்கன் ரைஸ், நூடுல்ஸ், சில்லி புரோட்டா, சில்லி சிக்கன் என சைனீஸ் உணவு அயிட்டங்களிலும் பயிற்சி வழங்கப்படுகிறது. ஆண், பெண் இருபாலரும் இந்தப் பயிற்சியில் பங்கேற்கலாம். கல்வித் தகுதி தேவையில்லை’ என்கிறார்.

மேலும் அவர், ‘நாங்கள் மூன்று தலைமுறைகளாக உணவுத் துறையில்தான் உள்ளோம். புரோட்டா மாஸ்டர்களுக்கான தேவை அதிகம் உள்ளது. ரூ.800லிருந்து ரூ.1,000 வரை நாளொன்றுக்கு சம்பளம் கொடுத்தாலும் ஆட்கள் கிடைப்பதில்லை. ஒருபக்கம் வேலையில்லாமல் ஆட்கள் நிறைய பேர் உள்ளனர். இன்னொரு பக்கம் வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. இந்நிலையில்தான் ஏன் நாமே பயிற்சி கொடுத்து புரோட்டா மாஸ்டர்களை உருவாக்கக்கூடாது என்று சிந்தித்ததன் விளைவுதான் இந்த செல்ஃபி புரோட்டா கோச்சிங் சென்டர். ஒரு பேட்ஜ்சில் ஒரு மாதத்திற்கு 200லிருந்து 250 நபர்கள் வரை இங்கே கற்றுச் செல்கின்றனர். கடந்த 40, 50 ஆண்டுகளாக இந்தத் தொழிலில் நாங்கள் இருக்கின்ற காரணத்தால் இதிலுள்ள நுணுக்கங்கள் அனைத்தும் தெரியும். இந்தத் தொழிலில் எந்த அனுபவம் இல்லாமல் வந்தாலும், அவர்களுக்கு புரியும் வகையில் கற்றுத் தருகிறோம். தண்ணீர், உப்பு எவ்வளவு சேர்ப்பது, உருண்டை பிடிப்பது, பிசைவது, வீசுவது என அனைத்தையும் கற்றுத் தேறுகின்றனர். முதலில் துணியில்தான் வீசுவதற்கு பயிற்சி அளிப்போம். பிறகுதான் மாவு பிசைய பயிற்சி அளிக்கப்படுகிறது. வெளியூரிலிருந்து வருகின்ற நபர்கள் தங்குவதற்கு இடவசதி உண்டு. வெளி மாநிலங்களிலிருந்தும் வருகிறார்கள். வெளிநாடுகளில் உள்ளோருக்கு ஆன் லைன் வழியாகவும் பயிற்சி அளித்து வருகிறோம்’ என்கிறார்.


Watch – YouTube Click

What do you think?

இந்த அரசு பூஜ்யம் மதிப்பெண் தான் பெற்று இருக்கிறது ஆர் பி உதயகுமார் பேச்சு

வெற்றிக்கு காரணமான நரேந்திர மோடியே தோல்விக்கும் காரணம் விசிக எம்பி ரவிக்குமார்