in

புதுச்சேரி…பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக மோசடி.

புதுச்சேரி…பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக மோசடி.

புதுச்சேரியில் போலி அறக்கட்டளை நடத்தி டிராவல்ஸ் உரிமையாளரிடம் ரூ. 3.75 கோடி மோசடி செய்த வழக்கில், போலி சான்றிதழ் தயாரிக்கும் கோவை ஆசாமி உள்பட 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி வைசியாள் வீதியைச் சேர்ந்தவர் ஜெயபால், 67; இவரது மனைவி பவானி, 63; இவர்களின் தோழிகளான தேங்காய்த்திட்டில் தொண்டு நிறுவன அறக்கட்டளை நடத்தி வந்த நேரு நகர் ராஜன் மனைவி ரமா, 56; நெல்லித்தோப்பு மார்க்கெட் வீதியைச் சேர்ந்த திவ்யநாதன் மனைவி சாந்தி, 57; இருவரும், தங்களின் அறக்கட்டளைக்கு வெளிநாட்டில் இருந்து ரூ. 125 கோடி பணம் வந்துள்ளதாகவும், அதனை ரிசர்வ் வங்கி பிடித்தும் செய்து கொண்டு, செயலாக்க கட்டணம், வரி செலுத்த கூறியுள்ளது. அதற்கு பணம் அளித்தால் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். ஜெயபால், பவானி இருவரும் லாஸ்பேட்டையில் டிராவல்ஸ் நடத்தி வரும் நடராஜனை சந்தித்து, முதலீடு செய்யும் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினர். கோயம்புத்துார் சரவணன்பட்டி விசுவாசப்புரத்தைச் சேர்ந்த கண்ணன், 42; ரிசர்வ் வங்கி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு அறக்கட்டளை பெயரில் ரூ. 125 கோடி பணம் வந்துள்ளதாக போலியாக தயாரித்து கொடுத்த ஆவணங்களை காண்பித்தனர்.

இதை நம்பிய நடராஜன் கடந்த 2011 முதல் 2018 வரை, தன்னுடைய சொத்துக்கள் விற்ற பணம், சேமிப்பு, உறவினர், நண்பர்களிடம் கடன் பெற்று ரூ. 3.75 கோடி பணத்தை ஜெயபால், பவானி, ரமா, சாந்தி, கோவை கண்ணனனுக்கும் கொடுத்தார். பணத்தை பெற்றுக் கொண்ட 5 பேரும் திருப்பி தராமல் ஏமாற்றி வந்தனர்.

இது தொடர்பாக கடந்த ஆண்டு பிப்., மாதம் நடராஜன் சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் அளித்தார். போலீசார் மோசடி வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் தேங்காய்த்திட்டு ரமா, நெல்லித்தோப்பு சாந்தி, பவானி மற்றும் அவரது கணவர் ஜெயபால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். நால்வரிடம் நடத்திய விசாரணையில், ரமா, சாந்தி நடத்தி வரும் தொண்டு நிறுவன அறக்கட்டளை போலியானது எனவும், ரிசர்வ் வங்கி மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் பெயரில் கோயம்புத்துார் புரோக்கர் கண்ணன் ஏராளமான போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்துள்ளது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் டோமினிக் தலைமையிலான போலீசார் கோயம்புத்துார் விரைந்தனர். இரவு நேரத்தில் தனியார் ஓட்டல்களில் தங்கி பகல் நேரத்தில் மட்டும் வீட்டிற்கு வருவதை வழக்கமாக வைத்திருந்த கண்ணனை கைது செய்து புதுச்சேரி கொண்டு வந்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கண்ணன், காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

What do you think?

மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் புதுச்சேரி அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய 334-ம் ஆண்டு திருவிழா

போலி உயில் தயாரிப்பில் சப் – ரிஜிஸ்டர் அலுவலக ஊழியர்களுக்கும் பங்கு.கைதான மூவர் தடுக்கிடும் தகவல்கள்.