in

செஞ்சிக்கோட்டை ஸ்ரீகமலக்கன்னி அம்மன் தேர் திருவிழா. ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்பு


Watch – YouTube Click

செஞ்சிக்கோட்டை ஸ்ரீகமலக்கன்னி அம்மன் தேர் திருவிழா. ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்பு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டை மலை மீது எழுந்தருளியுள்ள ஸ்ரீகமலக்கன்னி அம்மன் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது.

இதில் ஆயிரகணகான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்து அம்மனை தரிசனம் செய்தனர்.

செஞ்சி நகரில் அருள்பாலித்து வரும் ஸ்ரீகமலக்கன்னி அம்மன், ஸ்ரீராஜகாளியம்மன், ஸ்ரீமகாமாரியம்மன், கோட்டை வீரப்பன் ஆகிய தெய்வங்களுக்கு ரத உற்சவ திருவிழாவை முன்னிட்டு கடந்த 13-ம்தேதி காலை கொடியேற்றுதலும், அன்று மாலை அம்மனுக்கு காப்பு கட்டுதலும் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து தினமும் இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா திங்கள்கிழமை வரை 8 நாட்கள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் முக்கிய திருவிழாவான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு அன்று காலை ஸ்ரீகமலக்கன்னி அம்மன் உள்ளிட்ட மூலவர் அம்மன்களுக்கு பால் தயிர் சந்தனம் பன்னீர் விபூதி,பஞ்சாமிர்தம் தேன் போன்ற வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக தீப ஆராதனைகள் நடைபெற்றது.

தொடர்ந்து செஞ்சி மந்தைவெளி திடலில் இருந்து 108 பால் குட ஊர்வலம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு அம்மனுக்கு கூழ் வார்த்தலும், அன்னதானமும் நடைபெற்றது. பகல் 2.30 மணி அளவில் அலங்கரிப்பட்ட தேரினில் சிறப்பு அலங்காரத்துடன் ஸ்ரீகமலக்கன்னி அம்மன் அருள்பாலித்தார்.

தொடர்ந்து மேளதாளம் முழங்க சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஆர்.விஜயகுமார் உள்ளிட்ட ஆயிரகணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

தேர் செஞ்சி மந்தைவெளியில் இருந்து திருவள்ளுவர் தெரு வழியாக திருவண்ணாமலை சாலை, விழுப்புரம் சாலை, சத்திர தெரு வழியாக நிலையை அடைந்தது. புதன்கிழமை மஞ்சள் நீராட்டு விழாவும், ஸ்ரீகமலக்கன்னி அம்மன், ஸ்ரீராஜகாளியம்மன், ஸ்ரீமகாமாரியம்மன், கோட்டை வீரப்பன் ஆகிய தெய்வங்கள் பிரியாவிடை பெற்று தங்களது திருத்தலத்திற்கு செல்லும் நிகழ்ச்சியும் காப்பு களைதலும் நடைபெற இருக்கிறது.

விழா ஏற்பாடுகளை ஸ்ரீகமலக்கன்னி அம்மன் கோயில் அறங்காவலர் அரங்க.ஏழுமலை,மற்றும் உபயதாரர்கள், கிராம பொது மக்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

திருத்தேர் விழாவில் செஞ்சி துணை கண்காணிப்பாளர் கவினா,செஞ்சி காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையில் 200 -க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Watch – YouTube Click

What do you think?

பாபநாசம் அருகே அடுத்தடுத்து சிறுத்தைகள் கூண்டில் சிக்கியது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடலில் புனித நீராடி பக்தர்கள்