அரசு அதிகாரிகள் தலையிட்டு தன்னுடைய நிலத்தை மீட்டு தர ராணுவ வீரர் கோரிக்கை
ராஜபாளையம் அருகே விவசாயம் செய்யும் நோக்கத்தில் ஆசையாக வாங்கிய நிலத்தை, அருகே உள்ள கல்குவாரி உரிமையாளர் தனது செல்வாக்கை பயன்படுத்தி ஆக்கிரமித்து வைத்துள்ளதாக முன்னாள் ராணுவ வீரர் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கோபாலபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். ராணுவ வீரனான இவர் ஓய்வு பெற்ற பின்னர் தனக்கு கிடைத்த பணத்தை கொண்டு, விவசாயம் செய்யும் நோக்கத்தில் காளவாசல் செல்லும் வழியில் ஓடையை ஒட்டி உள்ள சுமார் 9 ஏக்கர் நிலத்தை கந்தவேல் என்பவரிடம் இருந்து வாங்கி உள்ளார்.
கந்தவேல் உள்ளிட்ட ஏழு பேருக்கு சொந்தமான இந்த நிலத்தை, கீழ ராஜகுலராமன் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வைத்து நிலத்திற்கு சொந்தமானவர்கள் அனைவரும் கையெழுத்திட்டு விற்பனை செய்துள்ளனர். இந்த நிலையில் நிலத்திற்கு அருகே கல்குவாரி நடத்தி வரும் சண்முகவேல் என்பவர், நிலத்தின் உரிமையாளர் கந்தவேலிடம், கிரையம் செய்வதற்காக முன்பணம் வழங்கி உள்ளதாக கூறி விவசாயம் செய்வதை தடுத்துள்ளார்.
இது குறித்து உரிமையாளரிடம் கேட்டபோது தான் பணம் வாங்கவில்லை என தெரிவித்துள்ளார். இது குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்ற வந்த நிலையில் குவாரி உரிமையாளர் சண்முகவேல், நிலத்தில் விவசாயம் செய்யக்கூடாது என நீதிமன்றத்திற்கு சென்று தடையாணை வாங்கி உள்ளார். நிலம் தனக்கு சொந்தம் என கூறி விவசாய நிலத்தில் கற்களையும் ஜல்லி கற்களையும் மலைபோல் குவித்து வைத்துள்ளார். இதற்கு எதிராக நிலத்தின் முன்னாள் உரிமையாளர் கந்தவேலும் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இதற்கிடையே விவசாயம் செய்வதற்காக ஆசையாக வாங்கிய நிலத்தை பயன்படுத்த முடியவில்லை என்பதால் வேதனை அடைந்த தற்போதைய உரிமையாளர் ராஜேந்திரன், உரிய விசாரணை நடத்தி தீர்வு ஏற்படுத்தி தர கோரி வருவாய் துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வரை கடந்த 4 ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறார். ஆனால் இதுவரை தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என புலம்பும் ராஜேந்திரன், கடந்த 4 ஆண்டுகளாக எந்த விவசாயமும் செய்யாததால் நிலத்தில் முளைப்பு திறன் குறைந்து வருவதாகவும், இதே நிலை நீடித்தால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்பதால் அரசு அதிகாரிகள் தலையிட்டு தன்னுடைய நிலத்தை மீட்டு தர கோரிக்கை விடுத்துள்ளார்.