குத்தாலம் திரௌபதி அம்மன் ஆலயத்தில் தை மாத பௌர்ணமி சிறப்பு மகாயாகம், கலசபிஷேகம்
குத்தாலம் திரௌபதி அம்மன் ஆலயத்தில் தை மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு மகாயாகம் மற்றும் கலசபிஷேகம் நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் செட்டியார் வடக்கு வீதியில் திரௌபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் மாதம்தோறும் பௌர்ணமி தினத்தன்று சிறப்பு யாகம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி தை மாத பௌர்ணமியை முன்னிட்டு ஆலயத்தில் கணபதி ஹோமம் சுதர்சன ஹோமம் துர்கை லக்ஷ்மி சரஸ்வதி மூல மந்திர ஹோமம் ஆகியவை நடைபெற்றது. இதற்காக குத்தாலம் கடைவீதி மன்மதீஸ்வரர் ஆலயத்தில் இருந்து வெள்ளி கவசம் மற்றும் சீர் வரிசைகள் மேளதாளங்கள் முழங்க ஆலயத்திற்கு எடுத்துவரப்பட்டது.
ஆலயத்தில் பௌர்ணமி யாகம் நடைபெற்றது, தொடர்ந்து பூர்ணகுதிக்கு பிறகு யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மேளதாளங்கள் முழங்க கோயிலை வலம் வந்தது.
இதனை அடுத்து யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு திரௌபதி அம்மனுக்கு கட அபிஷேகம் நடைபெற்று.
பின்னர் மகாதீபாரதனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.