பெருமாள் முத்துப்பல்லக்கில் எழுந்தருளும் ஐதீக விழா
பங்குனி உத்திரத்தின் முக்கிய நிகழ்ச்சியாக, பரிமளரெங்கநாதர், முத்துப்பல்லக்கில், மல்லியம் கிராமத்திற்கு எழுந்தருளி காட்சி கொடுக்கும் ஐதீக விழா நடைபெற்றது, சீர்வரிசை எடுத்து வந்து வரவேற்ற பொதுமக்கள்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 108 வைணவ திவ்ய தேசங்களில், 22வதும், காவிரிக்கரையில் அமைந்துள்ள பஞ்ச அரங்க ஆலயங்களுல் ஐந்தாவதும், சந்திரன் சாப விமோசனம் பெற்றதுமான, பரிமளரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது.
ஆலயத்தின் ஆண்டு பங்குனி உத்திரபெருவிழா, கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய திருவிழாவான இன்று, பாரம்பரியமாக, மயிலாடுதுறை அடுத்த மல்லியம் கிராமத்திற்கு பெருமாள் முத்துப்பல்லக்கில் எழுந்தருளும் ஐதீக விழா நடைபெற்றது.
இதனை முன்னிட்டு, மல்லியம் கிராமத்திற்கு மயிலாடுதுறையில் இருந்து பல்லக்கில் சென்றார். வழி எங்கும் பொதுமக்கள் சிறப்பு வரவேற்பு அளித்த நிலையில் மல்லியத்தில் அமைந்துள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார்.
அவருக்கு மல்லியம் கிராம எல்லையில் பொதுமக்கள் சீர்வரிசை எடுத்து வந்து பூர்ணகும்ப மரியாதையுடன் எதிர்கொண்டு அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வேதியர்கள் மந்திரம் ஓத பெருமாள் மல்லியம் கிராமத்தில் பொதுமக்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்கு பிறகு ஆலயம் திரும்புகிறார் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.